Wednesday 23 April, 2008

கவி பாடு...

அண்ணன் என்றால்
கவிதை ஊற்று
காட்டாறாய் பாய்கிறதே
கரைகளை உடைக்கிறதே!

உறவு செல்லும் கவிதை இது
உணர்ச்சியுள்ள கவிதையிது
பாசமழை பொழிக்கின்றாய்
பாவன்மை காட்டுகின்றாய்.

இக்கவிதை இருவரிடையில்
இதுவேயின்னும் பலரிடையில்
பாராட்டு பெற வேண்டாம்?
பயனுள்ள பொருள் தேடு.

பஞ்சத்தால் பசியால்
படையால் பிணியால்
பாடுபடும் பாமரரை
பலப்படுத்த நீ பாடு.

காலமெல்லாம் கடலினிலே
கண்ணியமாய் மீன் பிடித்தும்
கதியில்லா குடும்பங்கள்
கரைசேர கவி பாடு.

படித்ததனால் பசி போகா
பழையபடி கடல் போவோம்
பல்லவி இதை மாற்றிடவே
புதுக்கவிதை நீ பாடு.

படிப்பு வேண்டும் பணம் வேண்டும்
பதவியும் சேர்ந்தே வேண்டும்
பலர்முன்னே பாங்குடன் வாழ
பலம் தரும் கவி பாடு

கற்ற கல்வி கடலிநிலும்
மீன் பிடிக்கும் உத்தியிலும்
பயன்படுத்தி பயன்பெறவே
பண்புடனே நீ பாடு.

வேதனைகள் நமக்கிருக்க
வேகம் அதை மாற்றிடவே
வேங்கைஎன நீ எழுந்து
வேதம் போல் கவி பாடு.

வேதனையால் சோதனையால்
சோர்ந்துவிடும் நம்மவரை
நம்பிக்கை கவி பாடி
நாளெல்லாம் நீ வாழ்த்து.

முடமான நம்பிக்கையால்
முடமாகும் நம்மவர்க்கு
முயற்ச்சி திருவினையாக்குமென்ற
மந்திரக்கவி பாடு.

நமது பணம் நாம் சேர்த்து
நமது வாழ்வை வளப்படுத்த
நமது வங்கி நாம் தொடங்க
நலமான கவி பாடு.

மீனவனின் மீட்பு ஒன்றே
மீதமுள்ள நமது நாளின்
மிகச்சிறந்த பணியென்று
மிகவுடனே கவி பாடு.
பெங்களுர்- 1998

No comments: