Friday 25 October, 2013

மனித நேயம் (சம உரிமை, சுய மரியாதை, பொறுப்புணர்வு...)

மனித நேயம் 
(சம உரிமை, சுய மரியாதை, பொறுப்புணர்வு...)
-பணி . பங்கிராஸ் , வழக்குரைஞர், திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றங்கள் 

'ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது, மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை' (மாற்கு 2:27). 'கடவுள் தம் உருவில் மானிடரை படைத்தார் , கடவுளின் உருவிலேயே அவர்களை படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை படைத்தார்.' (தொடக்க நூல் 1:27)

'உலகின் ஒளி  நானே...' (யோவான் 8:12) என்ற இயேசுவே 'நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்' (மத்தேயு 5:14) என்றும் கூறிச்சென்றார். நம்மை அவருக்கே ஒப்பாக்கினார் ! மட்டுமா, 'மிக சிறியோராகிய  என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்த தையெல்லாம் எனக்கே செய்தீர்கள் ' (மத்தேயு 25:40, 45) எனக்கூறி சமூகம் தள்ளிவைத்தவர்களை தமக்கு ஒப்பாக்கினார் ! இதே உணர்வைத்தான், உணர்ச்சியைத்தான் அவர் தம்மை  கடவுளோடு ஒப்பிடும்போதும் பார்க்கிறோம்: '...என்னை காண்பது தந்தையை காண்பது ஆகும்.' (யோவான் 14:9) என்றும், 'நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்' (யோவான் 10:30) என்றும் சாதிக்கிறார். 

இன்னும் பாருங்கள்: '...உங்கள் விண்ணக தந்தை நிறை உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறை உள்ளவர்களாய் இருங்கள்' (மத்தேயு 5:48) என்று சாற்றுகின்றார். மேலும் பேதுரு சொல்வதை கேட்போம்: '...நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரசகுருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்...' (1பேதுரு 2:9); பவுலும் இதைத்தான் '...கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலை(யை)யும்...'(உரோமையர்  8:21) என சொல்லி போகிறார்.. 

இதே மக்களைப்பற்றி மோசேயிடம் கடவுள் 'முறையிடு'வதை பார்ப்போம்: '...என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்... எனவே... அவர்களை விடுவிக்கவும் பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் ;நாட்டிற்கு அவர்களை நடத்தி செல்லவும் இறங்கி  வந்துள்ளேன்.' (விடுதலை பயண நூல் 3:7-8). 

கடவுளுக்கே நிகரென்று கூறுமளவுக்கு படைக்கப்பட்ட, பெருமையுடைத்த மனிதனின் அவலத்தில் அக்கரையோடு  அண்டி வரும் ஆண்டவனையே விவிலியம் அறிமுகப்படுத்துகின்றது. அதையே 'கடவுளோடு கடவுளாய்...இருந்த வாக்கு...மனிதர் ஆகி...நம்மிடையே குடிகொண்ட..' (யோவான் 1:1, 14) இயேசுவாக தெரிந்துகொண்டோம்,உணர்ந்துகொண்டோம், உறவுகொண்டோம்!

நற்செய்தி முழுக்க, முழுக்க அவரது மனிதநேயமே... நமது இன்றைய அவலங்களில் கலங்கிபோகாமல், அவரைப்போல் தீர்க்கமான முடிவோடு அவற்றை நேர்கொள்ள,  முறியடித்து வெற்றி வாகை சூட, உயிர்த்தெழ போராடுவோம்,தேவைப்பட்டால் உயிரை இழக்கவும் தயாராவோம். [25.10.13தொடரும்...]

இதே உண்மையைத்தான்  இந்துமதமும் உபநிடதங்கள் வழியாக சொல்லிசெல்கின்றது: 'நீ அதுவே ... நான்  பிரம்மம்.' அரவிந்தரும் இதே கருத்தை  சொல்வதை பார்ப்போம்: 'மரணத்தோடு முடியக்கூடிய சிறுமையல்ல நாம்...' என்றெல்லாம். 

விலங்குகள்கூட உரிமை பாராட்டுவதை நாம் அறிவோம். அவைக்கென தேர்ந்துகொள்ளும் இடங்களில் வேறு யாரையும் அவை  அனுமதிப்பதில்லை.  தேர்வு செய்த இணைக்காக, இரைக்காக அவை வெறியோடு போராடுவதை பார்த்திருக்கிறோம். இவை பெரும்பாலும் உடல் சார்ந்த தேவைகள். ஆனால் மனிதனுக்கு மட்டும் இதுபோக உள்ளம் சார்ந்த தேவைகளும் உண்டல்லவா. இவை அனைத்துக்கும் உத்தரவாதம் வேண்டும். அது நேற்று இன்று தொடங்கிய ஒன்றல்ல, மாறாக தொன்றுதொட்டே மானிடம் அனுபவித்துவந்த உரிமைகள் அவைகள்.

இன்னும் சொல்லப்போனால், அது யாரும் தந்து நாம் பெற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றல்ல. அது நம் பிறப்போடு வந்தது, கடவுள் தந்தது என்றுகூட சொல்லலாம். இதில் விட்டுக்கொடுக்க ஒன்றும் இல்லை. இதைத்தானோ தன்மானம் என தமிழன் சொல்லிவந்தது!

 இதை மனிதன் உணர்ந்தது அடிமை சம்பிரதாயம், இன/வகுப்பு பாகுபாடு, போர்க்கால கொடூரங்கள், அட்டூழியங்கள், வலிமை அற்றவர்களை ஓரங்கட்டுவது,  ஒதுக்கி வைப்பது போன்ற ஈன செயல்களால், இழிசெயல்களால்.

இரண்டு உலகப்போர்களும், காலனி ஆட்சி கொடுமைகளும் குறிப்பாக இவற்றை தட்டிகேட்கும் சந்தர்ப்பம் மனிதத்துக்கு தந்துசென்றது. நமது காந்தியடிகளுக்கு தென் ஆப்ரிக்காவில் நேர்ந்த கொடுமையே அவரை சுதந்திர போராட்ட வீரராக, அதிலும் அகிம்சை போராட்ட வீரராக மாற்றியது. இவையெல்லாம் சேர்ந்தே ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு, அதன் 'மனித உரிமை பிரகடன'த்துக்கு(1948) காரணமானது.

நமது தாய்த்திரு நாட்டில் சதி, சிறுவர் மணம்,  சாதி கொடுமைகள் என்பனவும்  மனித அபிமானத்தை உலுப்பிவிட்டது.  இவையும் உலக அரங்கில் ஏற்பட்ட தாக்கங்களும் நமது அரசியலமைப்பு சட்டத்தில் மனித உரிமைக்கு முக்கிய பங்கு அளிக்க உதவியது, குறிப்பாக, அடிப்படை உரிமைகள், இட ஒதுக்கீடு என்பவைக்கு உத்தரவாதம் தர.  இதே உணர்ச்சிகளே இந்திய நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்க்க தன்மான சிங்கங்களை தூண்டியது.

1993-ல் தேசிய மனித உரிமை கமிஷன் அமைய இவையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரகடனம் போன்றவையும் உதவியாக இருந்தது. இந்த மனித உரிமைகளை வலுப்படுத்தும் சட்டங்களும் சட்ட திருத்தங்களும் நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கின்றன, வளர்ந்துகொண்டே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக: தகவல் அறியும் உரிமை சட்டம், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், உணவு உரிமை சட்டம் போன்றவை.

இவற்றை சாதாரண குடிமகனும் அனுபவிக்க அவன் அவற்றை தெரிந்துகொள்ள வேண்டும், எழுத்தறிவில்லாத அவர்களுக்கு யாரேனும் சொல்லி தெரியவைக்கவேண்டும். அப்போது மட்டுமே ஒளிமயமான ஜனநாயகம் நிஜமாகும். அல்லாதவரை லஞ்சம், ஊழல், அடாவடித்தனம்,அட்டூழியம் நிறைந்து இறையரசாக வேண்டிய நம் பூமியே நரகமாகிவிடும்.

மனித உரிமையிலிருந்து பிரித்து பார்க்கமுடியாத ஓன்று சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு. உயிர் வாழ மாசுபடாத வாயு, தண்ணீர் மிக அவசியம். உணவு போருட்களில்கூட விஷம்... ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுற்றுப்புற சூழல் என்றையும்விட இன்று மிக அவசியம்.  

No comments: